Wednesday, June 11, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை, எஸ்.டி. இந்து கல்லூரி நாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரி கோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தருமபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரி திருச்சி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி சென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி மசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரி ராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரி மதுரை, பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக ரூ. 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.500க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, ரூ.550 க்கான வரைவோலையை "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை 15' என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்கதாக எடுத்து, "பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600015' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.