Friday, January 22, 2016

கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டம்: 2.84 லட்சம் மாணவர்கள் பயன்

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் 2.84 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார். இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:


உயர் கல்வியின் தரத்தை உயர்த்திடவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 39 கலை அறிவியல் கல்லூரிகளும், 11 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டக் கல்லூரியும், பெருங்குடியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகமும் அமைக்கப்பட்டு, சட்டக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 84,609 மாணவர்கள் தடையின்றி உயர் கல்வி கற்க வாய்ப்புப் பெற்று பயனடைந்துள்ளனர்.

இத்தகைய முயற்சிகளின் காரணமாக தேசிய அளவில் 23.6 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் தமிழகத்தில் 44.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம்: சமுதாயத்தின் நலிவுற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை அரசே எடுத்து நடத்த எடுக்கப்பட்ட முடிவு பாராட்டத்தக்கது. இதுவரை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.476 கோடி நிதியுதவியாக தமிழக அரசு வழங்கியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment