மாநில கல்லுாரி விடுதியில் நடந்த ஆபாச நடன சம்பவத்தில் பங்கேற்ற, முதல்வர் மற்றும் விடுதி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் பேராசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். சென்னையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாநில கல்லுாரியின் பின்புறமுள்ள,விக்டோரியா அரசு மாணவர் விடுதி விழாவில், ஆபாச நடன நிகழ்ச்சி நடந்தது. மார்ச், 24ல் நடந்த இந்த நிகழ்ச்சி குறித்த, வீடியோ சமூக ஆர்வலர் என்ற பெயரில், யூ டியூப் இணையதளத்தில் பரவி வருகிறது.
அதனால், மாநில கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் முதல், தற்போதைய மாணவர்கள் வரையிலும், பேராசிரியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விழாவை, முதல்வர் பிரம்மானந்த பெருமாள் துவக்கி வைத்துள்ளார். இந்த விழாவுக்கு, மாணவர்களின் பெயரில், இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிதி எங்கிருந்து வந்தது; ஏன் அதை தவறான, ஒழுக்கக் கேடான நிகழ்ச்சிக்கு செலவிட வேண்டும் என, பேராசிரியர்கள், மாணவர்கள், கல்லுாரி நிர்வாகத்தையும், விடுதி துணை கண்காணிப்பாளர் பேராசிரியர் அன்பு செல்வனிடம் கணக்கு கேட்டுள்ளனர்.
கல்வி நிறுவன வளாகத்தில் மோசமான நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்த, முதல்வர் பிரம்மானந்த பெருமாள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்கள், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்; வாட்ஸ் ஆப்பிலும் கருத்துகளை பரப்புகின்றனர்.
இந்த பிரச்னையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பேராசிரியர்கள், நேற்று கல்லுாரி முன், வாயில் முழக்க போராட்டம் நடத்த திரண்டனர். ஆனால், முதல்வர் அதற்கு அனுமதி அளிக்காததால், கல்லுாரி கல்வி இயக்குனரகம் சென்று, உதவி இயக்குனர் சண்முகத்திடம் மனு அளித்தனர். தேர்தல் அதிகாரிகளை அணுகவும் முடிவு செய்துள்ளனர்.
கல்லுாரியில், முதல்வர் அலுவலகத்தை, பேராசிரியர்களும், மாணவர்களும் முற்றுகையிட்டதால்,வகுப்புகள் முடங்கின. அதேநேரம், உயர்கல்வி செயலர் அபூர்வா, கல்லுாரி கல்வி இயக்குனர் (பொறுப்பு) உஷாராணி மற்றும் இணை இயக்குனர் கன்னிகா ஆகியோர், இந்த பிரச்னையில் தலையிடாமல் ஒதுங்கி, நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து, மாணவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment